பழனியில் மண்ணுளிபாம்பு விற்க முயன்றவர்கள் கைது. மூன்று பாம்பு பிடிபட்டது
பழனி அடிவாரம் பகுதியில் மண்ணுளிப்பாம்பு விற்க முயன்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த மூன்று பாம்புகளும் கைப்பற்றப்பட்டது.
பழனி அடிவாரம் பகுதியில் மண்ணுளிப்பாம்பு விற்க முயன்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த மூன்று பாம்புகளும் கைப்பற்றப்பட்டது.
பழனி அடிவாரம் பகுதியில் பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டு கடந்த சில தினங்களாக அடிவாரம் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு திருக்கோயில் விடுதி அருகே சிலர் சந்தேகத்துக்கு இடமாக நடமாடவே போலீஸார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மண்ணுளிபாம்பு விற்கும் குழுவினர் என்பதை அறிந்தவுடன் அவர்கள் தங்கியிருந்த அறையில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு டிராவல்ஸ் பேக்கில் மூன்று மண்பாம்புகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அடிவாரம் போலீஸார் பாம்பு மற்றும் பிடித்த நபர்களை பழனி வனத்துறை வசம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் ஏழு பேரும் பழனி மதினாநகரை சேர்ந்த அப்துல்பாரூக் மகன் மீராமைதீன்(37), கொடைக்கானல் ரோடு அய்யனாரப்பன் கோயில் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் கோபிநாத்(48), கொடைக்கானல் வடகவுஞ்சி மேல்பள்ளத்தை சேர்ந்த கரியமால் மகன் மோகன்(47), ஒட்டன்சத்திரம் தாலுகா காந்திநகர் வண்ணாம்பாறையை சேர்ந்த பெரியசாமி மகன் தங்கத்துரை(52), நத்தம் செந்துறை கோவில்பட்டியை சேர்ந்த சின்னய்யா மகன்கள் முருகன்(28), பொன்னுசாமி(29) மற்றும் மானூர் தெற்கு தெருவை சேர்ந்த நல்லசாமி மகன் கந்தசாமி(40) என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பழனி வனச்சரகர் கணேசன் கூறுகையில், பிடிபட்ட மண்ணுளி பாம்புகள் அனைத்தும் உயிரோடு நன்றாக உள்ளன. இவற்றை ஆந்திராவில் இருந்து கோவை வழியாக பழனிக்கு கொண்டு வந்துள்ளனர். இதில் ஒரு பாம்பு நான்கு கிலோவும், மற்ற இரண்டும் தலா இரண்டு கிலோவும் எடை உடையனவாகும். இந்த பாம்புகளை நத்தம், செந்துரை பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு கேரளாவில் இருந்து ஆட்களை வரவழைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த மூன்று பாம்புகளையும் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு வாங்கியுள்ளனர். பழனியில் வைத்திருந்த போது காவல்துறை வசம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஒப்படைத்ததன் பேரில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பாம்புகளை கைப்பற்றியுள்ளோம். மாவட்ட வன அலுவலரின் அனுமதி பெற்றபின் இந்த பாம்புகளை தேக்கன்தோட்டம் அடர்ந்த வனப்பகுதிகளில் உயிருடன் விட்டு விடுவோம் என தெரிவித்தார்.
மண்ணுளி பாம்புகளை இருதலை மணியன், உளி, டபுள் என்ஜின், டபுள்டக்கர் என பல்வேறு பெயர்களில் விற்பவர்கள் அழைக்கின்றனர். இதன் தலை மாதத்தில் பதினைந்து நாள் ஒருபக்கமும், மாதத்தில் பதினைந்து நாள் மறுபக்கமும் இருக்கும் என்றும், இதில் அபூர்வ மருத்துவகுணம் உள்ளது என்றும் கூறி விற்பனை செய்கின்றனர். ஆனால் இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அப்படி எந்த குணாதிசயமும் இந்த பாம்பில் இல்லை. தலை பாகமும், வால்பாகமும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பதால் இதுபோன்ற புரளிகள் கிளப்பப்படுகிறது.
இது செம்மண் விவசாய காடுகளில் அதிகமாக இருக்கும், நிலத்தை புரட்டி போட்டு இரை தேடுவதால் நிலத்தில் அதிகளவு காற்றோட்டம் ஏற்பட்டு விவசாயம் செழிக்கும். ஆகையால் இது விவசாயியின் நண்பன் என தெரிவித்தனர். கிராமங்களில் இந்த பாம்பு இருக்கும் நிலத்தில் விவசாயம் செழிப்பாக இருப்பதால் இதை லட்சுமியின் அம்சமாகவும் கிராமத்தினர் கருதுகின்றனர்.