சிதம்பரத்தில் குஜராத் இளைஞர் கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
சிதம்பரத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
சிதம்பரத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
சிதம்பரம் நகரில் நகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக கனகசபைநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி பின்புறம் குஜராத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் அங்கு குஜராத் மாநிலம் நவுசாரியா மாவட்டம், கம்ந்தாரியா கிராமத்தைச் சேர்ந்ந்த நித்தின்பாய் (27), அவருடன் பணியாற்றும் நவுசாரியா மாவட்டம் கட்டம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சோமுளாபாய் (35) ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 26-12-2014 அன்று நகராட்சி பள்ளி வளாகத்தில் கயிற்று கட்டிலில் தூங்கிக் தூங்கிக் கொண்டிருந்த நித்தின்பாயை, சோமுளாபாய் சம்மட்டியால் அடித்துக் கொலை செய்தார்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சகத் தொழிலாளியான சோமளாபாயை (35) கைது செய்து, சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு சார்பில் வழக்குரைஞர் தேவராஜ் வாதாடினார். விசாரணை முடிவுற்று நீதிபதி கிங்ஸ்ஸி கிருஸ்டோபர் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் குற்றம் நிருபிக்கப்பட்டதால், குற்றவாளி சோமுளாபாயிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து சோமுளா பாயை போலீஸார், நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் சென்று கடலூர் மத்தியசிறைச்சாலையில் அடைத்தனர்.