சிதம்பரம் கோயில்களில் முதல்வரின் செயலாளர் ஷீலாபிரியா சிறப்பு பிரார்த்தனை
சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வியாழக்கிழமை காலை தமிழக முதல்வரின் செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான எம்.ஷீலாபிரியா ஐஏஎஸ் தனது மகள் மற்றும்
சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வியாழக்கிழமை காலை தமிழக முதல்வரின் செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான எம்.ஷீலாபிரியா ஐஏஎஸ் தனது மகள் மற்றும் உறவினர்களுடன் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
முதல்வரின் செயலாளர் எம்.ஷீலாபிரியா நடராஜர் கோயிலுக்கு சென்று சிற்றம்பல மேடையில் ஏறி சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு வழிபட்டார். கோயில் பொதுதீட்சிதர்கள் ஷீலாபிரியா சார்பில் 1008 சகஸரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை செய்து பிரசாதத்தை வழங்கினர். பின்னர் அவர் நடராஜர் கோயிலுள் உள்ள ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமான், தாயார் சந்நிதி, ஆதிமூலநாதர் சந்நிதி உள்ளிட்ட அனைத்து சந்திதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவரை கிழக்கு கோபுர வாயிலில் கோயில் பொதுதீட்சிதர்கள் சார்பில் செயலாளர் ரா.பாஸ்கரதீட்சிதர் பொன்னாடை, மாலை அணிவித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
பின்னர் அவர் சிதம்பரம் நகரில் உள்ள ஸ்ரீஅனந்தீஸ்வரர் கோயில், ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டார். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் க.முருகன் செய்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, இந்த பிராத்தனை மற்றும் வழிபாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.