வரதட்சணை கொடுமை: கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு
பழனி அருகே தாதநாயக்கன்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் மாரிமுத்து(30). இவரும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா கு.புதூரை சேர்ந்த பாண்டியம்மாள்(25) என்பவரும் விரும்பியதால் கடந்த
பழனி அருகே வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பழனி அருகே தாதநாயக்கன்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் மாரிமுத்து(30). இவரும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா கு.புதூரை சேர்ந்த பாண்டியம்மாள்(25) என்பவரும் விரும்பியதால் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது தாரணி(6), வர்ஷினி(4) என்ற இருபெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாரிமுத்து சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த ராமு என்பவர் மனைவி புவனா(26)வுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவருடன்தான் வாழ்வேன் என்று பாண்டியம்மாளை மிரட்டி வந்துள்ளார். இதற்கு மாரிமுத்துவின் தந்தை மூர்த்தி(60)யும், தாயார் தெய்வானை(50)யும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதற்காக பாண்டியம்மாளை கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி வீட்டிலேயே அறையில் பூட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை புவனா பாண்டியம்மாளிடம் எவ்வளவு பணம் உனக்கு வேண்டும் என்று கேட்டு,கேவலமாக பேசியுள்ளார். அப்போது மாரிமுத்து பாண்டியம்மாளுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் இரண்டு இலட்சம் ரூபாய் பணமும், இருபது பவுன் நகையும் தரவேண்டும். இல்லாவிட்டால் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்துள்ளார். உறவினர்கள் முன்னிலையிலேயே பாண்டியம்மாள் தலைமுடியையும், சேலையையும் இழுத்து தகராறு செய்ததோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதன்கிழமை பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.