கந்தர்சஷ்டித் திருவிழா: நாளை மறுநாள் சூரசம்ஹாரம்- அக்.30 திருக்கல்யாணம்
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கோயிலில் கடந்த அக்.24ம் தேதி கந்தர் சஷ்டித் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது. ஒருவார காலம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தர்சஷ்டித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்ஹாரம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. அக்.30 அன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கோயிலில் கடந்த அக்.24ம் தேதி கந்தர் சஷ்டித் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது. ஒருவார காலம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். வெள்ளிக்கிழமை மதியம் மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து வினாயகர், மூலவர், சண்முகர், துவாரபாலகர் மற்றும் வீரபாகு உள்ளிட்டோருக்கு காப்புக்கட்டப்பட்டு விழா துவங்கியது. விழா நாட்களில் மலைக்கோயிலில் தினமும் சண்முகர் தீபாராதனை, சண்முகார்ச்சனை மற்றும் தங்கச்சப்பரம், வெள்ளிக் காமதேனு, தங்கமயில் வாகனங்களில் சுவாமி உலா எழுந்தருளல் ஆகியன நடைபெற்றது.
மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் தினமும் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது. நாளை மறுநாள் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மதியம் மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு சூரர்களை வதம்செய்யும் பொருட்டு மலைக்கோயில் மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல்வாங்கும் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு சுவாமி அடிவாரம் வந்தடைவார். மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரவதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்படும். பின்னர் மலைக்கோயிலில் சம்ப்ரோட்சண பூஜை நடத்தப்பட்டு நடை திறக்கப்பட்டு அர்த்தஜாமபூஜை நடைபெறும் பழனிக்கோயிலில் நான்கு கிரிவீதியில் நான்கு சூரர்கள் வதம் செய்வது வேறெந்த கோவிலிலும் இல்லாத சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அக்.30 அன்று மலைக்கோயிலில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணமும், திருமண விருந்தும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.