திமுக நிர்வாகி வீட்டில் 40 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திமுக நிர்வாகி வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ.1லட்சம் வியாழக்கிழமை திருட்டு போனது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திமுக நிர்வாகி வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ.1லட்சம் வியாழக்கிழமை திருட்டு போனது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுவது:
விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தனியார் சர்க்கரை ஆலை ஊழியர் பலராமன்(63). இவரது மனைவி கிரகலட்சுமி. மகன் விஜயவேலன், விக்கிரவாண்டி ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்.
முண்டியம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடந்தது. இதில், பலராமன் தனது குடும்பத்தோடு சென்று கலந்து கொண்டார். பின்னர், வீடு திரும்பிய போது வீட்டு கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 பவுன் நகை, ரூ.1லட்சம், வெள்ளி கொலுசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், விழுப்புரத்திலிருந்து கைரேகை நிபுணர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
பலராமன் வழக்கமாக தனது வீட்டை பூட்டி சாவியை வைக்கும் இடத்தை தெரிந்து கொண்டவர்களே இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.