முகப்பு
தற்போதைய செய்திகள்

ரைஸ்புல்லிங் பாத்திரம் என கூறி ரூ.9.50 லட்சம் மோசடி

தேனி மாவட்டம் தேனி கம்போஸ் ஓடைத்தெருலை சேர்ந்தவர் நந்தகோபால் மனைவி லதா(41). இவரது பெரியப்பா முத்துச்சாமி மகன் ஆனந்தராஜ்.  பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் ஆனந்தராஜ் பழனியை

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

பழனி அருகே ரைஸ்புல்லிங் பாத்திரம் என கூறி ரூ.9.50 இலட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் தேனி கம்போஸ் ஓடைத்தெருலை சேர்ந்தவர் நந்தகோபால் மனைவி லதா(41). இவரது பெரியப்பா முத்துச்சாமி மகன் ஆனந்தராஜ்.  பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் ஆனந்தராஜ் பழனியை அடுத்த பெரியகலையமுத்தூர் பகுதிக்கு வியாபார நிமித்தமாக வந்து செல்வது வழக்கம். அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சிவா என்பவர் பழக்கமாகியுள்ளார். சிவா தனக்குத் தெரிந்த ஒருவரிடம் அபூர்வ சக்தி வாய்ந்த சொம்பு(பாத்திரம்) இருப்பதாகவும், அது அரிசியை இழுத்து வைக்கும் தன்மையுடையது என்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள அந்த பாத்திரத்தை வாங்கினால் கோடீஸ்வரராகலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். 

இதை நம்பிய ஆனந்தராஜ் பணமில்லாத காரணத்தால் தனது சகோதரியான லதாவிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் அவ்வப்போது சிவாவை சந்தித்து பாத்திரம் தொடர்பாக பேசிவிட்டு அடிக்கடி செலவுக்கு பணமும் கொடுத்து வந்துள்ளனர்.  ஒருகட்டத்தில் பாத்திரத்தை விலைக்கு வாங்கி விடலாம் என முடிவு செய்த லதா போடியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரிடம் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கிக் கொண்டு சனிக்கிழமை பழனி வந்துள்ளார். சிவாவை தொடர்பு கொண்ட போது அவர்களை பழனி-கொழுமம் ரோட்டில் அக்கமநாயக்கன்புதூர் மேற்கு ரீச்வாய்க்கால் கோயில் அருகே வரச்சொல்லியுள்ளார்.  அங்கே சென்ற போது சிவாவுடன் உடுமலைப்பேட்டையை சேர்ந்த மதன், பரந்தாமன் என்ற அண்ணாச்சி, சடையன் என்ற வெங்கடேசன் ஆகியோரும் இருந்துள்ளனர். 

அதிசய பாத்திரத்துக்கு பேரம் பேசி ரூ.9.50 லட்சம் என முடிவு செய்து பணத்தை கொடுத்தவுடன் ஒரு பார்சலை நான்கு பேரும் கொடுத்துள்ளனர்.  பழனி வந்து அதை பிரித்து பார்த்த போது அதில் பேப்பரில் சுற்றப்பட்ட இளநீர் இருந்ததும், அவர்கள் பணத்தை வாங்கிவிட்டு தங்களை ஏமாற்றியதும் தெரியவந்தது. 

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பழனி தாலுகா காவல் நிலையத்தில் லதா கொடுத்த புகாரின் பேரில் பழனி தாலுகா ஆய்வாளர் சேகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.