நிரம்பி வரும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி: பாசனத்திற்கு நீர் திறக்காததால் பயிர்கள் கருகும் அபாயம்
வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 46.07 அடியாக உள்ளது. ஏரிக்கு கீழணையிலிருந்து விநாடிக்கு நூறு கனஅடி வடவாறு வழியாக வந்து
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி நிரம்பி வருகிறது. இன்னும் ஒரிரு தினங்கள் ஏரி முழுக்கொள்ளளவை அடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 46.07 அடியாக உள்ளது. ஏரிக்கு கீழணையிலிருந்து விநாடிக்கு நூறு கனஅடி வடவாறு வழியாக வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 77 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
பாசனத்திற்கு நீர் திறக்காகதால், பயிர்கள் கருகும் அபாயம்: காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களுக்கு 50 சதவீதத்திற்கு மேலான விவசாயிகள் நேரடி நெல்விதைப்பு சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்டு இறுதியிலும், செப்டம்பர் முதல்வாரத்தில் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள், தற்போது தேவையான நீர் இல்லாததால், மழையை நம்பி உள்ளனர். மழை பெய்யாவிடில் பயிர்கள் கருகிவிடும். கடந்த ஆண்டை போல மீண்டும் நெல்லை விதைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக நீரை தேக்கி வைப்பதில் கவனம் செலுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசனத்திற்கு நீர் திறப்பதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் ஆண்டு தோறும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதி விவசாயிகள் பாதிப்படைந்து, விவசாய தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். காலதாமதமாக நீர் திறந்து விடப்படுவதால், விவசாயிகளுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் தண்ணீர் வரவில்லை என்றால் நேரடி விதைப்பு செய்துள்ள பயிர்கள் கருகிவிடும் என்கிறார் தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம்.