ஒருவரை அடித்து கொலை மிரட்டல் செய்ததாக 5 பேர் கைது
தற்போதைய செய்திகள்ஒருவரை அடித்து கொலை மிரட்டல் செய்ததாக 5 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவரை அடித்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 5 பேரை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சித்தாலம்புத்தூரைச் சேர்ந்தவர் க.கருப்பசாமி (34). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சொந்த வேலையாக புறப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர், என்.ஜி.ஓ.ஓ. காலனியைச் சேர்ந்த ஜெய் ஆசீர்வாதம் என்பவரின் மகன் ஜான் கைடு (26) என்பவர் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுள்ளார். கருப்பசாமி இவரை ஏற்றிக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது செல்போனில் கருப்பசாமியுடன் முன்விரோதம் உள்ள மாரிமுத்து மகன் மைனர்சாமி (26) என்பவருக்கு ஜான் கைடு தகவல் கொடுத்துள்ளார். இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் காலனி இறக்கத்தில் நால்வர் வழிமறித்துள்ளனர். கருப்பசாமியை அனைவரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மா.மைனர்சாமி (26), த.மனோகர் (28), த.நவநீதகிருஷ்ணன் (28), சீ.வைரமுத்து (22), ஜெ.ஜான் கைடு (26) ஆகியோரைக் கைது செய்தனர்.