அழகு நிலையத்தில் திமுக பிரமுகர் படுகொலை: சென்னையில் 5 பேர் சரண்
சேலம் மாவட்டம் வீராணம் அருகே திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை
சேலம் மாவட்டம் வீராணம் அருகே திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்துள்ளனர்.
வீராணம் அருகேயுள்ள பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (40). திமுக பிரமுகரான இவர், வியாழக்கிழமை அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான அழகு நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், பள்ளிப்பட்டியைச் சேர்ந்த ச.பார்த்திபன் (21), அரிசிபாளையம் சே.மணிகண்டன் (22), பள்ளிப்பட்டி ச.கார்த்தி (21), ஜெ.மணிகண்டன் (24), கு.சேது (எ) செங்குட்டுவன் (22) ஆகிய 5 பேர்களும் சென்னை அருகேயுள்ள பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். முருகன் கொலை வழக்கில் காவல்துறையினர் தங்களைத் தேடி வருவதாக அறிந்ததை அடுத்து சரணடைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைத் தேடி வரும் காவல்துறையினர், சேலம், அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே பள்ளிப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணனின் வீட்டில் மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களின் எதிரொலியாக வீராணம், பள்ளிப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.