முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலசமுத்திரம் ரெங்கசாமிகரட்டில் குவியும் பெருமாள் பக்தர்கள்

புரட்டாசி மாதம் என்றாலே உலகளந்த பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  தற்போது புரட்டாசி மாதம் துவங்கி நான்கு நாட்களான நிலையில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:49 AM
பகிர்:

பழனியை அடுத்த பாலசமுத்திரம் ரெங்கசாமி கரட்டின் மலைஉச்சியில் உள்ள ஸ்ரீரெங்கநாதரை தரிசனம் செய்ய புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

புரட்டாசி மாதம் என்றாலே உலகளந்த பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  தற்போது புரட்டாசி மாதம் துவங்கி நான்கு நாட்களான நிலையில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை தரிசனத்துக்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பழனியை அடுத்த  பாலசமுத்திரம் அருகேயுள்ளது அதிசயங்கள் நிறைந்த ஸ்ரீரெங்கசாமிகரடு ஆகும்.  இங்கு மலைமேல் ஸ்ரீரெங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பழனி மலைக்கோயிலில் இருந்து பாலசமுத்திரம் நோக்கி பார்க்கும் போது ரெங்கசாமி கரடு ஆஞ்சநேயர் படுத்திருப்பது போன்று காட்சியளிக்கிறது.  இங்கு தலைப்பகுதியில் ஸ்ரீரெங்கநாதர் சிலையும், பாதம் பகுதியில் ராமர்பாதமும் உள்ளது சிறப்பம்சமாகும். பழனி மலைக்கோயிலை விட 4 பங்கு உயரமுள்ள இந்த குன்றில் மேலே செல்ல பாதையென்பது இல்லை.

மலைச்சரிவு, மரங்களுக்கு இடையேவுள்ள பகுதி, பாறைகள் என அடர்ந்த மலைக்காட்டில் செல்வது போல பக்தர்கள் வெகுசிரமங்களுக்கு இடையே சென்று சுவாமி தரிசனம் செய்கின் றனர். புரட்டாசி மாதத்தில் மட்டுமே அதிக அளவில் பக்தர்கள் செல்லும் இந்த வழியில் காட்டுயானைகள் நடமாட்டம் சர்வசாதாரணமாக உள்ளது. மரம் ஒன்றின் கீழே அருள்மிகு ரெங்கநாதர் ஐந்துதலை நாகத்தின் மீது சயன கோலத்தில் உள்ளார்.  அவர் நாபியில் இருந்து பிரம்மன் தாமரையில் வருவது போலவும், கையில் சிவலிங்கத்தையும் பிடித்த நிலையில் கலைநயத்துடன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.  பாதத்தில் இலக்குமி காலைப்பிடித்தவண்ணம் உள்ளார்.  ஒருபுறம் முருகப்பெருமான் மறுபுறம் ஆஞ்சநேயர் சிலைகள் அமையப்பெற்ற இச்சிலை கலைநுட்பம் வாய்ந்ததாகும். மலையின் மேல் சைவகருப்பசாமி, கல்அத்தி மரம் உள்ளது.  அடிவாரத்தில் உள்ள தொட்டிச்சியம்மனை நினைத்து காரியம் கைகூடினால் மக்கள் மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.  நல்ல பாதை அமைக்க அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் ஏற்பாடு செய்தால் கோயிலுக்கு மேலும் பக்தர்கள் வருவர் என கோயில் பூசாரி கோரிக்கை விடுத்துள்ளார். 

புரட்டாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு பழனியை அடுத்த கொடைக்கானல் ரோட்டில் உள்ள அருள்மிகு கண்ணாடிப்பெருமாள் கோயில், பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப்பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அருள்மிகு அகோபில வரதராஜப்பெருமாள் கோயில், ஆயக்குடி அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.