முகப்பு
தற்போதைய செய்திகள்

தம்பதி எரித்துக் கொலை: மகன் உள்ளிட்ட 4 பேர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது சேலம் நீதிமன்றம்

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே கடந்த 2012-ம் ஆண்டில் தம்பதி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மகன் உள்ளிட்ட 4 பேர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை

Updated On : 23 செப்டம்பர், 2014 at 7:14 PM
பகிர்:

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே கடந்த 2012-ம் ஆண்டில் தம்பதி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மகன் உள்ளிட்ட 4 பேர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞர் எம்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

பூலாம்பட்டி அருகேயுள்ள வளைய செட்டியூரைச் சேர்ந்தவர் ராமசாமி (67). இவரது முதல் மனைவி சரோஜா. இவர் இறந்ததை அடுத்து அவரது சகோதரி குள்ளம்மாளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். குள்ளம்மாளின் மகன் வைத்தீஸ்வரன் (35). ராமசாமிக்கும் வைத்தீஸ்வரனுக்கும் இடையே பாகப் பிரிவினை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.இதற்கிடையே ராமசாமி, குள்ளம்மாளை விட்டு விட்டு 3-வதாக குப்பம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், சொத்துகளை அவரது வாரிசான கோமதிக்கு தர முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வைத்தீஸ்வரன், தனது தந்தை ராமசாமியையும் குப்பம்மாளையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இதன்படி கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி ஒரு கும்பல் ராமசாமியின் வீட்டுக்குத் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றனர். இதில் ராமசாமி, குப்பம்மாள் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்கள், நீதிபதி ரபீக்கிடம் மரண வாக்குமூலம் கொடுத்தனர்.அதில், தனது வீட்டுக்கு வைத்தீஸ்வரன், உறவினர்கள் கே.ராமசாமி (54), கே.ராஜேந்திரன் (48), ஏ.வெங்கட்ட ரெட்டி (49) ஆகியோர் தீ வைத்ததாகக் கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர்.

Advertisement

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பூலாம்பட்டி போலீஸôர், ராமசாமி, ராஜேந்திரன், வெங்கட்ட ரெட்டி மூவரையும் கைது செய்தனர். தேடப்பட்டு வந்த வைத்தீஸ்வரன் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.இந்த வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர்களுக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.