நெல்லை அருகே மகள் படுகொலை: தந்தை உள்பட இருவர் கைது
திருநெல்வேலி அருகே புதன்கிழமை அதிகாலை தவறான உறவைக் கண்டித்த மகளை வெட்டிக் கொலை செய்த தந்தை மற்றும் அவரது கள்ளக்காதலியை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி அருகே புதன்கிழமை அதிகாலை தவறான உறவைக் கண்டித்த மகளை வெட்டிக் கொலை செய்த தந்தை மற்றும் அவரது கள்ளக்காதலியை போலீஸார் கைது செய்தனர்.
முன்னீர்பள்ளம் அருகே பூக்குழி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சொள்ளமுத்து மகன் பெருமாள் (60). கூலித் தொழிலாளியான இவரது மனைவி 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பெருமாளுக்கு பேச்சியம்மாள் (42) என்ற மகளும், மாரிமுத்து (25) என்ற மகனும் உள்ளனர்.
பேச்சியம்மாளுக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவருடன் அப்பகுதியில் வசித்து வந்தார். மாரிமுத்து திருமணம் ஆகவில்லை. மனைவி இறந்துவிட்ட நிலையில் பெருமாளுக்கும் அப்பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
தந்தையின் தவறான உறவு குறித்து பலரும் பேச்சியம்மாளிடம் அவதூறாக பேசியதால், வேதனையடைந்த அவர் தனது தந்தையை கண்டித்தாராம். இதில் ஆத்திரமடைந்த பெருமாள் புதன்கிழமை அதிகாலை பேச்சியம்மாளை அரிவாளால் வெட்டி ஓடி விட்டார்.பலத்த காயமடைந்த பேச்சியம்மாள், சம்பவ இடத்திலே இறந்தார். தகவலறிந்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி. ராஜேந்திரன், காவல்ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பேச்சியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து பெருமாள், மாரியம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.