முகப்பு
தற்போதைய செய்திகள்

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: தலைமைப் பொறியாளர் ஜாமீன் மனு நிராகரிப்பு

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஜாமீன் மனு மீது அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஜாமீன் மனு மீது அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது. வரும் 13ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என முதன்மை நீதிபதி எம். நசீர்அகம்மது அறிவித்தார்.

திருநெல்வேலி வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளராக பணி செய்து வந்த முத்துக்குமாரசாமி, அத்துறையில் காலியாக உள்ள 7 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிப். 20 இல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து ஆரம்ப கட்டத்தில் ரயில்வே போலீஸார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். வேளாண் அமைச்சர், ஆளும் கட்சி பிரமுகர்களின் நெருக்கடியால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதால் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து தற்கொலை தூண்டுதல், கூட்டுச் சதி, ஊழல் தடுப்பு ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி குற்றவியல் நடுவர் மன்றத்தில் இம்மாதம் 5 ஆம் தேதி ஆஜர் செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோரை இம்மாதம் 17 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதாகி சிறையில் இருக்கும் தலைமைப் பொறியாளர் செந்தில், ஜாமீன் கேட்டு திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை புதன்கிழமை
திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி எம். நசீர்அகம்மது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தலைமைப் பொறியாளர் செந்தில் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞர் வெங்கடேஷமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்திலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் என். சிவலிங்கமுத்து, முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு முதல் கட்ட விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் விவரங்கள் தெரிவிக்க வேண்டியது இருப்பதால் செந்திலுக்கு ஜாமீன் அளிக்க ஆட்சேபம் தெரிவித்தார்.

தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணையை வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளுமாறு செந்தில் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். அரசு தரப்பில் காவல் அவகாசம் கேட்டதால், ஜாமீன் மனு மீதான விசாரணையை இம்மாதம் 13 ஆம் தேதிக்கு (திங்கள்கிழமை) நீதிபதி நசீர்அகம்மது ஒத்திவைத்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →