பாமக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவச கல்வி: ஜெ.குரு எம்எல்ஏ
பாமக ஆட்சிக்கு வந்தால், அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். அனைத்து தரப்பினருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ
பாமக ஆட்சிக்கு வந்தால், அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். அனைத்து தரப்பினருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ தெரிவித்தார்.
சிதம்பரம் கனகசபைநகர் சிவகாமி அம்மாள் கலையரங்கில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சோழ மண்டல மாநாடு குறித்த சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி விளக்க பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் கு.திருஞானம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆறு.கலையரசன் வரவேற்றார். நகரத் தலைவர் பெ.க.அருள், செயலாளர் தி.கல்லிஸ், ஒன்றியச் செயலாளர்கள் செள.ராஜா, பான்.சசிக்குமார், நா.கார்த்தி, ப.சரவணன், செல்வ.பிரதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பாமக ஆட்சிக்கு வந்தால், என்ன செய்யும் என்பதை விளக்கும் மாநாடாக பாமக சோழ மண்டல மாநாடு ஜெயங்கொண்டத்தில் வருகிற 17-ம் தேதி நடத்தப்படுகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால், ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்கப்படும். தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ஜெ.குரு தெரிவித்தார்.
கூட்டத்தில் பாமக மாநில துணைத் தலைவர்கள் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் கி.தேவதாஸ் படையாண்டவர், மாநிலக்குழு உறுப்பினர் சஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நகர இளைஞரணி செயலாளர் திருமூர்த்திராஜன் நன்றி கூறினார்.