4.230 மில்லி கிராம் தங்கத்தில் நடராஜர் கோயில் பொற்சபை: சிதம்பரம் இளைஞர் சாதனை
சிதம்பரத்தில் விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4.230 மில்லி கிராம் தங்கத்தில் நடராஜர் கோயில் பொற்சபை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
சிதம்பரத்தில் விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4.230 மில்லி கிராம் தங்கத்தில் நடராஜர் கோயில் பொற்சபை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவில் வசிப்பவர் ஜெயபால் பத்தர். விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த இவரது மகன் ஜே.முத்துக்குமரன் (32). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் 12 வயதிலிருந்து தந்தையுடன் சேர்ந்து கவரிங் மற்றும் தங்க நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அந்த அனுபவத்தினால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகை மற்றும் பொருள்களை செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இவர் தற்போது நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4.230 மில்லி கிராம் தங்கத்தில் நடராஜர் கோயில் பொற்சபை, அதன் உள்ளே ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் 140 மில்லி கிராமிலும், 120 மில்லி கிராமில் கொடிமரமும், 80 மில்லி கிராமில் குத்துவிளக்கும் செய்துள்ளார். மேலும் இதேபோன்று 1.800 மில்லி கிராம் தங்கத்தில் 1 செ.மீ உயரத்தில் 4 கோபுரம் மற்ரும் பொற்சபையுமம், 60 மில்லிகிராமில் லிங்கமும் செய்துள்ளார்.
இவர் கடந்த 2010 ஆண்டு 840 மில்லி கிராம் தங்கத்தில் மின்விசிறி (240 மில்லி), மண்வெட்டி (140 மில்லி), அரிவாள் (30 மி), கைவிசிறி (20 மி),சிறிய தாலி (100 மி), பெரிய தாலி (150 மி), மோதிரம் (40மி), தாலிபொட்டு (40 மி), தாலிகுண்டு (180 மி) ஆகிய 9 வகை நகை மற்றும் பொருள்களை தயாரித்துள்ளார். அத்துடன் 13 கிராம் வெள்ளியில் அடிபம்பு ஒன்றை வடிவமைத்துள்ளார். 2013-ம் ஆண்டு 8 கிராம் 200 மில்லி தங்கத்தில் ஒன்றரை இன்ச் அளவிலான தாஜ்மஹாலை அழகாக வடிவமைத்து தத்ரூபமாக தயாரித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.22ஆயிரம். மேலும் அவர் பக்தர் ஒருவர் வேளாங்கண்ணி கோயிலுக்கு வேண்டுதலாக காணிக்கை செலுத்த கோரியதின் பேரில் 3 கிராம் தங்கத்தில் அழகிய வடிவில் தங்க ஊஞ்சல் ஒன்றை செய்து வழங்கியுள்ளார். கடந்த 2015 பிப்ரவரி மாதம் 720 மில்லி கிராம் தங்கத்தில் அரை இன்ச் அளவிலான உலகப் கோப்பையை அழகிய வடிவில் தயாரித்துள்ளார்.