சிதம்பரத்தில் புதை சாக்கடை வடிகால் தொட்டி கழிவுநீரில் மூழ்கி துப்புரவுத் தொழிலாளர் மரணம்
சிதம்பரம் நகரில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதைசாக்கடை வடிகால் கழிவுநீர் மேன்வெல்லை திறந்து உள்ளே இறங்கி சுத்தம் செய்த போது, கழிவுநீரில் மூழ்கி துப்புரவுத் தொழிலாளி ஒருவர்
சிதம்பரம் நகரில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதைசாக்கடை வடிகால் கழிவுநீர் மேன்வெல்லை திறந்து உள்ளே இறங்கி சுத்தம் செய்த போது, கழிவுநீரில் மூழ்கி துப்புரவுத் தொழிலாளி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகரில் உள்ள அனைத்து புதைசாக்கடை மேன்வெல்லை திறந்து அடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் அம்பேத்கர்நகர் பேட்டை பகுதியில் வசிப்பவர் சத்தியமூர்த்தி (35). இவர் சிதம்பரம் நகராட்சியில் 2006-ம் ஆண்டு முதல் நிரந்திர துப்புரவுத் தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை சக ஊழியர்களுடன் காரைக்காட்டு சொக்கலிங்கம் பிள்ளைத் தெருவில் உள்ள புதைசாக்கடை மேன்வெல்லை திறந்து அடைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீரில் மூழ்கி எழுந்திருக்க முயற்சித்த போது மூச்சித்திணறி கழிவுநீரில் மூழ்கி இறந்தார். உடனடியாக அருகிலிருந்து அவரது உடலை மீட்டு மேலே கொண்டுவந்தனர். தகவல் அறிந்து சிதம்பரம் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சாலைமறியல்: விடுமுறை நாளில் துப்புரவுப்பணியில் ஈடுபடுத்தியதை கண்டித்தும், துப்புரவுத்தொழிலாளர் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் துப்புரவுத்தொழிலாளர்கள்
மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வடக்குமெயின்ரோட்டில் சிதம்பரம்-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.