நடராஜர் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்ரண்டன்ட் ஆய்வு
மே.1ந் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ராதிகா ஆகியோர்
மே.1ந் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ராதிகா ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று முன்னேற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையம், விஐபி வாகனங்கள் நிறுத்தப்படும் நிரந்த பேருந்து நிலையம், ஸ்ரீநடராஜர் கோயில் யாகசாலை பகுதி, கோயில் உள்புறம், கோயின் மேலே முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கும்பாபிஷேகத்தை அமர்ந்து பார்க்கும் இடம், பொற்கூரை, ஆயிரங்கால் மண்டபம், தற்காலிக படிக்கட்டுகள் ஆகியவற்றை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் ஏ.ராதிகா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டன்.
பின்னர் ஆட்சியர் தெரிவித்தது: கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புறவழிச்சாலையில் வரும் பேருந்துகளை நிறுத்தவதற்கு தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரில் வரும் பக்தர்கள் நிறுத்துவதற்காக பைசல் மகால் அருகே மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் கார்களை மேலவீதியில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்கு 23 இடங்களில் வழிகாட்டி போர்டுகள் அமைக்கப்படவுள்ளது. தற்காலிகமாக மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
ஆய்வின் போது சிதம்பரம் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி, துணை ஆட்சியர் தினேஷ். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமலைச்சாமி, சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரடிவேலு, சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், சுகாதாதுறை துணை இயக்கநர் டாக்டர் ஜவகர்லால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் மோகனசுந்தரம், வட்டாட்சியர் எஸ்.சீனுவாசன் மற்றும் பொதுப்பணித்துறையினர் நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.