நெல்லையில் வறண்டது கொடுமுடியாறு அணை!
வடகிழக்கு பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தை விட கூடுதலாக 161.5 சதவீதம் மழை பெய்தது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள 11 அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழைக்கு நிரம்பிய கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 2.50 அடியாக குறைந்ததை அடுத்து அணை மூடப்பட்டது.
வடகிழக்கு பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தை விட கூடுதலாக 161.5 சதவீதம் மழை பெய்தது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள 11 அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து பெய்த மழைக்கு குறைந்த கொள்ளவை கொண்ட கடனாநதி, ராமநதி அணைகள் 2 முறை நிரம்பியது.
50 அடி கொள்ளளவை கொண்ட கொடுமுடியாறு அணை கடந்த 2014 இல் நவம்பர் மாத இறுதியில் நிரம்பியது. இம்மாவட்டத்தில் அணைகள் நிரம்பியதை அடுத்து முழு அளவில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கொடுமுடியாறு அணையின் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
திங்கள்கிழமை நீர்மட்டம் 2.50 அடியாக குறைந்து வறண்டதை அடுத்து அணை மூடப்பட்டது.அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 121.60 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.32 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 106.86 அடி,கடனாநதி அணை நீர்மட்டம் 43.50 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 43.75 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 34.45 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 29.50 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 62.75 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 47.75 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 21.65 அடியாகவும் இருந்தது.
தண்ணீர் திறப்பு: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 277 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 137 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளின் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பாபநாசம் அணையில் இருந்து 1405 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் 485 கனஅடியும், கடனாநதி அணையில் 50 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.