பழனியில் தொடரும் பக்தர்கள் கூட்டம்
பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டமும்,
பழனியில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்ற நிலையிலும் புதன்கிழமை ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பழனி மலைக்கோயிலில் குவிந்தனர்.
பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டமும், செவ்வாய்க்கிழமை தைப்பூசத் திருத்தேரோட்டமும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளியானை, வெள்ளிஆட்டுக்கிடா, தந்தசப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா எழுந்தருளினார். தைப்பூசத் தேரோட்டம் முடிந்தாலும் புதன்கிழமை மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்திருந்தனர். மலைக்கோயிலிலேயே வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் காவடியுடன் ஆடிப்பாடி வலம் வந்தனர். சுவாமி தரிசனம் செய்ய பலமணி நேரம் நீடித்தது. புதன்கிழமை மாலை அடிவாரம் சேதுபதி மண்டபத்துக்கு தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி இரவு தங்கக்குதிரை வாகனத்தில் நான்குஇரதவீதி உலா எழுந்தருளினார். முன்னதாக வையாபுரி கண்மாயில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியை தம்பதி சமேதராக சுவாமி கண்டுகளித்தார். விழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.
நாளை தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு மற்றும் நாளை மறுதினம் தெப்பதேர் உலாவும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவு திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.