பழனி அருகே கோரிக்கடவில் சாலை மறியல்
பழனி அருகே நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோரி ஊராட்சிமன்ற தலைவர் தலைமையில் ஏராளமானோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி அருகே நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோரி ஊராட்சிமன்ற தலைவர் தலைமையில் ஏராளமானோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியை அடுத்தது கோரிக்கடவு கிராமம். பழனி-தாராபுரம் சாலையில் உள்ள இந்த கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து ரோடுவரை வந்து விட்டது. இந்த சாலையில் பள்ளிகள் அதிக அளவில் உள்ளது. மேலும் தைப்பூசத்திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாவின் போது இந்த வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பல்வேறு சமயங்களில் இங்கு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு, பலத்த காயம் போன்றவை ஏற்பட்டுள்ளது.
ஆகவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடுமாறு பலமுறை நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தே வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை கோரிக்கடவு ஊராட்சி மன்றத் தலைவர் கணபதி தலைமையில் ஏராளமானோர் பழனி-பழைய தாராபுரம் சாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவமறிந்த கீரனூர் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைத்துறையினரிடம் பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு செய்வதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.