சிதம்பரம் அருகே முதலைகள் அட்டகாசம்: முதியவர் ஒருவரை இழுத்துச்சென்றது
சிதம்பரம் அருகே முதலைகள் அட்டகாசத்தால் கிராமமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். திங்கள்கிழமை காலை பழைய கொள்ளிடத்தில் முதியவர் ஒருவரை பிடித்து இழுத்துச் சென்றதாக
சிதம்பரம் அருகே முதலைகள் அட்டகாசத்தால் கிராமமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். திங்கள்கிழமை காலை பழைய கொள்ளிடத்தில் முதியவர் ஒருவரை பிடித்து இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தீயணைப்பு மீட்புத்துறையினர், வனத்துறையினர் படகு மூலம் முதலை பிடித்துச் சென்றவரை தேடி வருகின்றனர். மேலும் ஒரு முதலை பொதுமக்களால் பிடிக்கப்பட்டது.
சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து முதலைகள் நடமாட்டத்தால், கிராமத்தில் வாழும் மக்கள் குளம், வாய்க்கால், ஆறுகளில் இறங்கி கால்கழுவவோ, குளிக்கவோ அச்சம்படும் நிலை உருவாகியுள்ளது. தினமும் முதலைகள் நீர்நிலைகளிலிலிருந்து வெளியேறி குளம், வயல், வாய்க்கால்களில் புகுந்து மனிதர்கள் மற்றும் கால்நடைகளை கடித்து துண்புறுத்தி வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை பெராம்பட்டு அருகே பழைய கொள்ளிடத்தில் முதலை ஒன்று, அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பிடித்து கடித்து இழுத்துக் கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு அண்ணாமலைநகர் போலீஸார், தீயணைப்பு மீட்புத்துறையினர், வனத்துறையினர் விரைந்து சென்று 2 படகுகள் மூலம் முதலை இழுத்துச் சென்றவரின் உடலை தேடி வருகின்றனர். மேலும் பிற்பகல் சிதம்பரம் அருகே சாலியாந்தோப்பு பகுதியில் வயலுக்குள் புகுந்த 10 அடி நீள முதலையை அப்பகுதி மக்கள் பிடித்து கட்டிப்போட்டு வனத்துறையினருக்கு தெரிவித்தனர். வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று முதலையை பெற்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்தேக்கத்தில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.