சிதம்பரம் அருகே முதலை கடித்து இழுத்துச்சென்ற முதியவர் உடல் கண்டெடுப்பு
திங்கள்கிழமை காலை பெராம்பட்டு அருகே பழைய கொள்ளிடத்தில் முதலை ஒன்று, அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பிடித்து கடித்து இழுத்துக் கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டதாக அப்பகுதி
சிதம்பரம் அருகே முதலை கடித்து இழுத்துச்சென்ற முதியவர் உடல் செவ்வாய்க்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டது.
திங்கள்கிழமை காலை பெராம்பட்டு அருகே பழைய கொள்ளிடத்தில் முதலை ஒன்று, அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பிடித்து கடித்து இழுத்துக் கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு அண்ணாமலைநகர் போலீஸார், தீயணைப்பு மீட்புத்துறையினர், வனத்துறையினர் மற்றும் ஊர்மக்கள் சென்று 2 படகுகள் மூலம் முதலை இழுத்துச் சென்றவரின் உடலை தேடி வந்தனர்.
இந்நிலையில் முதலை கடித்து இழுத்து சென்றவரின் உடல் பழைய கொள்ளிடத்தில் மிதந்த போது செவ்வாய்க்கிழமை மாலை ஊர்மக்களால் கண்டெடுக்கப்பட்டது. முதலை கடித்து இறந்தவர் வெங்காயத்தலமேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர் செல்லதுரை (65) என்பது தெரியவந்துள்ளது. முதலை கடித்ததில் அவரது வலது முழங்கால், வலது தொடை முற்றிலும் சேதமுற்றிருந்தது. செல்லதுரையின் உடல் பிரதே பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.