முகப்பு
தற்போதைய செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள தமிழக மீனவர்கள் 22 பேரை மீட்டுத்தர வலியுறுத்தி மீனவர்கள் திடீர் சாலை மறியல்

சவூதி அரேபியாவில் சுமார் 7 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் கிடைக்காமல் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் 22 பேரை மீட்டுத் தர மத்திய,மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

சவூதி அரேபியாவில் சுமார் 7 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் கிடைக்காமல் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் 22 பேரை மீட்டுத் தர மத்திய,மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ராஜீவ்புரத்தில் நாகை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை  மீனவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது :

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்த ஏ.திருநாவுக்கரசு,கே.பிரதீப்,எஸ்.தினேஷ்,கே.சிவக்குமார் வெள்ளக்கோயிலைச் சேர்ந்த எம்.மாரியப்பன்,பி.கலைமணி,கே.வீரக்குமார்,குட்டியாண்டியூரைச் சேர்ந்த ஏ.சுதாகர்,காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மணிகண்டன், ஆர்.ரகுபதி,எஸ். சுப்பிரமணியன், வி.ரமேஷ், கே.பாண்டியன், ஏ.வீரன் மற்றும் சீர்காழி வட்டத்தைச் சேர்ந்த 4 பேர்,விழுப்பரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர்,கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகிய 22 பேரும் கடந்த 2013 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள ஒரு ஏஜெண்ட்  மூலமாக சவூதி அரேபியாவில் மீன்பிடி வேலைக்கு சென்றுள்ளனர். இவர்கள் முதல் மூன்று மாதங்கள் தங்கள் குடும்பத்தினருக்கு சம்பளம் அனுப்பியுள்ளனர்.பின்னர் சம்பளம் அனுப்பவில்லையாம்.

Advertisement

இது குறித்து அவர்களது குடும்பத்தினர் விசாரித்தபோது சவூதி அரேபியாவில் உள்ள ஏஜெண்ட்  முறையான சம்பளம் வழங்காததோடு 22 பேரையும் ஒரு தனி அறையில் வைத்து மிரட்டியதாக தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக அவர்களது குடும்பத்தினர் ஏஜெண்டிடம் பல முறை பேசியும் தீர்வு கிடைக்கவில்லையாம்.

இதற்கிடையே 22 பேரும் சவூதி அரேபியாவில் உள்ள தொழிலாளர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.ஆனால் 22 பேரும் தலா 7 ஆயிரம் சவூதி ரியால் பணம் கட்ட வேண்டும் என்றும் இல்லையென்றால் ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாம்.இந்நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது அங்குள்ள தமிழ் சங்கத்தின் பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மீனவர்களின் குடும்பத்தினர் கடந்த 4 மாத காலமாக மத்திய,மாநில அரசுகளிடமும்,வெளியுறவுத்துறையிடமும் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுக்கள் அளித்தும்,கோரிக்கைகள் விடுத்தும் வந்துள்ளனர்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் கடந்த  டிசம்பர் மாதத்துடன் அவர்களின் விசா காலம் முடிவடைய உள்ளதாக கூறி பாதிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதிகளைச் சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் கடந்த டிசம்பர் 7 ந்தேதி இதே பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினர்  மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நாகை மாவட்ட ஆட்சியரை இது தொடர்பாக நேரில் சந்தித்துப் பேசுவது என முடி செய்யப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.ஆனால் உரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவப் பஞ்சாயத்தார் தற்போது புதன்கிழமை மீண்டும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் எஸ்.கணபதி,பொறையாறு காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை சார் ஆட்சியர் முன்னிலையில் இப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சாலை மறியல் போராட்டத்தால் நாகை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments