பழனியில் ஆபத்தான பயணம்: கண்டுகொள்ளாத போலீஸார்
பழனியில் திருவிழா துவங்கவுள்ள நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை போலீஸார் கண்டுகொள்ளாததால்
பழனியில் திருவிழா துவங்கவுள்ள நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை போலீஸார் கண்டுகொள்ளாததால் உயிர்ப்பலி ஏற்படும் நிலை நேரிடும் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பழனியில் தைப்பூசத் திருவிழா துவங்கவுள்ள நிலையில் தற்போதே பக்தர்கள் வரவு அதிகரித்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்ப போதிய போலீஸார் இல்லாததால் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூச ஆலோசனைக்கூட்டத்தில் தைப்பூசத் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இவர்கள் திருவிழாக்காலத்தின் போது மட்டுமே ஈடுபடுத்தப்படும் நிலையில் மற்ற நேரங்களில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, கொடியேற்றம் துவங்கியது முதலே போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஆங்காங்கு ஈடுபடுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் விதிமுறைகளுக்கு புறம்பாக பயணிகள் வாகனத்தில் பயணம் செய்யாமல் சரக்குகள் ஏற்றி செல்லும் மினிலாரி, வேன், லாரிகளில் கூட்டம், கூட்டமாக வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது அதிக அளவிலானோர் காயமோ, பலியோ ஆக நேரிடுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வாகனத்தின் இருபுறமும் எந்த கதவும் இல்லாத நிலையில் பக்தர்கள் சிலர் சரக்கு வாகனத்தில் கோயிலுக்கு வந்தனர். இதுபோன்ற வாகன பயணத்தின் போது போலீஸார் பிடிக்கும் இடத்திலேயே அபராதம் விதித்தால் இதுபோன்ற பயணம் மேற்கொள்வோர் பயணத்தை தவிர்க்க ஏதுவாகும். இதை கண்டுகொள்ளாத நிலையில் ஆபத்தான பயணம் தொடரவே வாய்ப்பு ஏற்படும். பழனி நகரில் பைபாஸ், கிரிவீதி ரவுண்டானா உள்ளிட்ட பல இடங்களிலும் அவுட்போஸ்ட் அமைக்கப்பட்டாலும் அவை காட்சிப்பொருளாகவே உள்ளது. தவிர கிரிவீதி பாலாஜி பவன் ரவுண்டானாவில் தவறான காவல் நிலைய எண்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார்கள் செய்தாலும் அவை இதுவரை திருத்தப்படாததால் பக்தர்கள் புகார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.