அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ் 124 இடங்களும், பிடிஎஸ் 80 இடங்களும் நிரம்பின!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் எம்பிபிஎஸ் 124 இடங்களும், பிடிஎஸ் 80 இடங்களும் நிரம்பின.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் எம்பிபிஎஸ் 124 இடங்களும், பிடிஎஸ் 80 இடங்களும் நிரம்பின.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2015-16ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை கடந்த மே 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 22-ம் தேதி வரை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், அனைத்து படிப்பு மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டன. எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு 5940 விண்ணப்பங்களும், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 1442 விண்ணப்பங்களும் வரப்பெற்றன. முதல் கட்ட கலந்தாய்விற்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கு 930 பேருக்கும், பிடிஎஸ் படிப்பிற்கு 558 பேருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
எம்பிபிஎஸ் 124 இடங்கள் நிரம்பியது: புதன்கிழமை நடைபெற்ற எம்பிபிஎஸ் படிப்பிற்கான 150 இடங்களுக்கு 124 இடங்கள் நிரம்பின. எம்பிபிஎஸ் கலந்தாய்வில் பொதுப்பிரிவினர் (OC)- 46 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான (BC) 40 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (MBC) 14 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)(BCM) - 5 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 13 இடங்களும், தாழ்த்தப்பட்ட பிரிவினர் (SCA) (அருந்ததியர்)- 4 இடங்களும், பழங்குடியினர் (ST)- 2 இடங்களும் நிரம்பியது. மீதமுள்ள 26 இடங்களும் 2வது கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். காலியாக உள்ள இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (MBC)- 16, தாழ்த்தப்பட்ட பிரிவினர் அருந்ததியர் (SCA)-1, தாழ்க்கப்பட்ட வருப்பினர் (SC)- 9.
பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு!
வியாழக்கிழமை நடைபெற்ற பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க 558 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 230 மாணவ, மாணவியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். பொதுப்பிரிவில் மூன்று மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்று எம்பிபிஎஸ் படிப்பிற்கு அனுமதி சேர்க்கை பெற்றனர். அந்த மாணவ, மாணவியர்கள் விபரம்: ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த எஸ்.பி.மதுமிதா பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1166. இவர் 196.25 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தில் அனுமதி சேர்க்கை பெற்றார். இரண்டாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்ற விழுப்புரம் மாவட்டம் திருவாமாமத்துரைச் சேர்ந்த கவிகோ.தமிழரசன் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1159. இவர் 196.25 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று இரண்டாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார். மூன்றாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்ற கோவையைச் சேர்ந்த மாணவர் எஸ்.விஷால் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1163. இவர் 196.00 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று மூன்றாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றவர்கள் ஜூலை 3-ம் தேதிக்குள்ள கல்வி கட்டணத்தை கட்சி அனுமதி சேர்க்கை செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பிடிஎஸ் படிப்பு கலந்தாய்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கான அனுமதி சேர்க்கை ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆ.ரகுபதி, சிண்டிகேட் உறுப்பினர் கானூர் பாலசுந்தரம், ராஜா முத்தையா பல்மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மைதிலி, கலந்தாய்வு ஆலோசகர் டி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிடிஎஸ் 80 இடங்களும் நிரம்பின: வியாழக்கிழமை நடைபெற்ற பிடிஎஸ் கலந்தாய்வில் பிடிஎஸ் படிப்பிற்கான மொத்தம் 80 இடங்களும் நிரம்பின. விபரம் வருமாறு: பிடிஎஸ் கலந்தாய்வில் பொதுப்பிரிவினர் (OC)- 25 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான (BC) 21 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (MBC) 16 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)(BCM) - 3 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 12 இடங்களும், தாழ்த்தப்பட்ட பிரிவினர் (SCA) (அருந்ததியர்)- 2 இடங்களும், பழங்குடியினர் (ST)- 1 இடமும் நிரம்பியது.