அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ் 2-வது கட்ட கலந்தாய்வு: அனைத்து இடங்களும் நிரம்பின
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்பிபிஎஸ் படிப்பிற்கான 2வது கட்ட கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்பிபிஎஸ் படிப்பிற்கான 2வது கட்ட கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2015-16ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை கடந்த மே 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 22-ம் தேதி வரை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், அனைத்து படிப்பு மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டன. எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு 5940 விண்ணப்பங்களும், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 1442 விண்ணப்பங்களும் வரப்பெற்றன.
முதல் கட்ட கலந்தாய்விற்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கு 930 பேருக்கும், பிடிஎஸ் படிப்பிற்கு 558 பேருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற எம்பிபிஎஸ் படிப்பிற்கான 150 இடங்களுக்கு 124 இடங்கள் நிரம்பின. எம்பிபிஎஸ் கலந்தாய்வில் பொதுப்பிரிவினர் (OC)- 46 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கான (BC) 40 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (MBC) 14 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)(BCM) - 5 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 13 இடங்களும், தாழ்த்தப்பட்ட பிரிவினர் (SCA) (அருந்ததியர்)- 4 இடங்களும், பழங்குடியினர் (ST)- 2 இடங்களும் நிரம்பியது.
மீதமுள்ள 26 இடங்களுக்கான 2வது கட்ட கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கலந்தாய்விற்கு 150 மாணவ, மாணவியர்கள் தரவரிசைப்படி அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு- 16, தாழ்த்தப்பட்ட பிரிவினர் அருந்ததியர்-1, தாழ்க்கப்பட்ட வருப்பினர்- 9 உள்ளிட்ட 26 இடங்களும் நிரப்பப்பட்டன. 26 மாணவ, மாணவியர்களுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் அனுமதி சேர்க்கை ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதல்வர் பி.வி.எஸ்.பிரசாத், கலந்தாய்வு ஆலோசர் டி.ராம்குமார், மக்கள் தொடர்பு அலுவலக மேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.