ஆதார் அட்டை கேட்டு அரசு ஊழியர்களை அலைகழிப்பு செய்யும் கருவூலம்
அரசு ஊழியர்களின் ஆதார் எண் விவரங்களை அளித்தால் மட்டுமே சம்பள பட்டியல் பெற்றுக் கொள்வோம் என மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளது அலுவலர்களிடையே அதிர்ச்சியை
அரசு ஊழியர்களின் ஆதார் எண் விவரங்களை அளித்தால் மட்டுமே சம்பள பட்டியல் பெற்றுக் கொள்வோம் என மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளது அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் சு.முத்துராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஏற்கனவே அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இத்தீர்ப்புக்கு எதிராக மாவட்ட கருவூல அலுவலர், அரசு ஊழியர்கள் மாத சம்பளம் பெறுவதற்கு ஆதார் எண்ணையும் அளித்தால் தான் சம்பள பட்டியலை பெற்றுக் கொள்வோம் என கட்டாயப்படுத்தி வருகிறார்.
Advertisement
இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் மாவட்ட கருவூல அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அதற்கு மாவட்ட கருவூல அலுவலர் வெளியூர் சென்றிருப்பதாக கூறி பதில் அளிக்க மறுத்து வருகின்றனர். ஆனால், அந்த நேரத்தில் மாவட்ட கருவூல அலுவலரும், கூடுதல் மாவட்ட கருவூல அலுவலரும் அலுவலகத்தில் தான் இருந்துள்ள விவரத்தையும் அறிந்து கொண்டோம். இதுபோன்ற செயல் உண்மையான கண்டனத்திற்குரியது என்றும், இதை அனுமதிக்க முடியாது என்பதையும் தெரிவிக்கிறோம். எனவே அரசு ஊழியர்களிடம் உண்மைக்கு மாறான தகவலை தெரிவிக்கும் மாவட்ட கருவூல அலுவலகத்தை கண்டித்து வருகிற 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.