விருதுநகர் பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வழக்குரைஞர் உள்பட 3 பேர் கைது
விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வீடு புகுந்து திருடியவர்களிடம் இருந்து 22 சவரன் நகை, வெள்ளிப்பொருள்கள் மற்றும் மின்னனு
விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வீடு புகுந்து திருடியவர்களிடம் இருந்து 22 சவரன் நகை, வெள்ளிப்பொருள்கள் மற்றும் மின்னனு பொருள்கள் ஆகியவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பூட்டி கிடக்கும் வீடுகளில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பல்வேறு பொருள்களை திருடிச் சென்றனர். இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை விருதுநகர்-சாத்தூர் சாலையில் மாத்தநாயக்கன்பட்டி விலக்கில் காவல் ஆய்வாளர் அன்னராஜ், காவல் சார்பு ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் போலீஸாரை பார்த்ததும் உடனே திருப்ப முயற்சித்துள்ளனர். அதையடுத்து, சந்தேகம் அடைந்த போலீஸார் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்துள்ளனர். மேலும், விசாரித்ததில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டியனின் மகன் வடிவேல்(26), திருநாவுக்கரசு மகன் சிவானந்தகுமார்(27), சந்திரசேகர் மகன் பாண்டியரசன்(26) ஆகியோர் என்பதும், தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து வருகிற விவரமும் தெரியவந்தது. இதில், சிவானந்தகுமார் எம்.பி.ஏ பட்டதாரி என்பதும், பாண்டியரசன் வழக்குரைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
அதோடு, விருதுநகர் அருகே இனாம்ரெட்டிபட்டியில் ஒரேநாள் இரவில் கோபால்சாமி, ராமசாமி ஆகியோர் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் நகையை பறித்துச் சென்றது. அதேபோல், மதுரை தல்லாகுளத்தில் தொடர்ந்து 3 வீடுகளிலும் திருடிய வழக்குகளில் தொடர்புள்ளதும் தெரியவந்தது. உடனே அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் 22 சவரன் நகை, வெள்ளிப்பொருள்கள், மடிக்கணினி, கேமரா-2, விலையுயர்ந்த செல்லிடபேசிகள், கைக்கடிகாரங்கள், மயக்க மருந்து குப்பி, கையுறைகள், முகமூடிகள், கத்தி, பூட்டுகளை உடைப்பதற்காக நவீன பொருள்கள், கத்தி உள்ளிட்டவைகளையும் சூலக்கரை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்கள் 3 பேரையும் கைது செய்து திருட்டு வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.