முகப்பு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே.வாசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

கடலூரில் மறைவுற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ராமசாமி நாயுடுவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக திங்கள்கிழமை வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. சாதாரண மக்களுக்கு மேலும் சுமை ஏற்றக்கூடியதாக இந்த விலை உயர்வு உள்ளது. எரிபொருள் விலை உயர்வால், போக்குவரத்து வாடகையும் உயரும். அதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் பொறுப்பை மத்திய அரசே ஏற்க வேண்டும்.

என்எல்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். காலியாக உள்ள அத்தனை பணியிடங்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் அந்த பகுதி கிராமங்களில்குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, எவ்வளவு குடிநீர் உறிஞ்சப்படுகிறது என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில்வே சுரங்கப்பாதை பணி 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே பணிகளை விரைவுப்படுத்தி, இந்த ரயில்வே சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறந்துவிட வேண்டும்.

கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும். அதேபோல், கடலூர் துறைமுகம் அருகில் உள்ள முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் முகத்துவாரப் பகுதியில் நடந்த படகு விபத்துகளில் இதுவரை 32 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறுகின்றனர். எனவே, முகத்துவாரத்தை விரைந்து ஆழப்படுத்தி, படகு விபத்துகளை தடுக்க வேண்டும்.

காவிரியின் குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியினை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக உள்ளது. உறுப்பினர்சேர்க்கும் பணி மார்ச் மாதத்தில் நிறைவுபெறும். ஏப்ரல் மாதத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டு கட்சிக்கு முழு வடிவம் கொடுக்கப்படும். அதன்பிறகு, தேர்தலை நோக்கி வெற்றிகரமாக செயல்படத் தொடங்குவோம் என்றார் ஜி.கே.வாசன்.

பேட்டியின்போது, நிர்வாகிகள் ஏ.நெடுஞ்செழியன், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், ரகுபதி, வழக்குரைஞர் ஏ.எஸ்.சந்திரசேகர், ஞானசந்தர், புரட்சிமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.