தேவசபைக்கு பிரவேசம் செய்த ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜமூர்த்தி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திருப்பணியை முன்னிட்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி சித்சபையிலிருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்டு தேவசபைக்கு பிரவேசம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திருப்பணியை முன்னிட்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி சித்சபையிலிருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்டு தேவசபைக்கு பிரவேசம் செய்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகிற மே.1-ம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை கும்பாபிஷேகமும், அதே நாளில் ராஜசபை மற்றும் நான்கு ராஜகோபுரங்களும் மகாகும்பாபிஷகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி வேலை செய்வதற்கு வசதியாக ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சித்சபையிலிருந்து புறப்பட்டு தேவசபைக்கு பிரவேசம் செய்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்ரீநடராஜமூர்த்தி தரிசித்தனர். இதனை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை முதல் நடராஜர் கோயில் ஆயிரங்கால்மண்டபம் எதிரே உள்ள நடனப்பந்தல் அருகே மற்றும் 6 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இப்பூஜை மார்ச் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மார்ச்.8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 9.15 மணிக்கு மேல் பாலாலய சம்ப்ரோஷண (சிதம்பரம் ரகசியம் சம்ப்ரோஷணம்) வைபம் நடைபெறுகிறது. அன்று முதல் தேவசபையில் ஸ்ரீநடராஜமூர்த்திக்கு ஆறு கால பூஜைகளும் கும்பாபிஷேகம் வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.