தமிழ்நாட்டில் லோக் ஆயுக்த் அமைப்பை உருவாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ கோரிக்கை
தமிழகத்தில் அனைத்து துறைகளில் முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் வருவது குறித்து விசாரிக்க, மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் லோக் ஆயுக்த் என்ற அமைப்பை உருவாக்க
தமிழகத்தில் அனைத்து துறைகளில் முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் வருவது குறித்து விசாரிக்க, மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் லோக் ஆயுக்த் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அது குறித்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் தொலைகாட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் கேமராவை உடைத்து, அலுவலகர்களை தாக்கியுள்ளனர். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். திருநெல்வேலி வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி என்ற நேர்மையான அதிகாரி கடந்த பிப்.20-ம் தேதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓட்டுநர்கள் நியமனத்தில் அமைச்சர் சிலரை சிபாரிசு செய்து நியமிக்க கட்டளையிட்டு நிர்பந்தப்படுத்தப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுமிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டது இச்சம்பவம் உண்மை என்பதற்கு எடுத்துக்காட்டாகும். எனவே அவரது தற்கொலை குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
லோக் ஆயுக்த் அமைப்பு உருவாக்க வேண்டும்: வேளாண்துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் புகார்கள் குறித்து தமிழகஅரசு உயர்மட்ட குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் குறித்து புகார்கள் வந்துள்ளது. முறைகேடுகள் புகார்கள் குறித்து விசாரணை நடத்த பல மாநிலங்களில் லோக் ஆயுக்த் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே வரும் சட்டப்பேரவை தொடரில் லோய் ஆயுக்த் அமைப்பு தொடங்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.
நடராஜர் கோயிலுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும்: நடராஜர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.பாரம்பரியம், கலை, பண்பாடு மற்றும் தொன்மை வாய்ந்த நடராஜர் கோயிலை தேசிய தொல்லியத்துறையினர் பாதுகாக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட தீட்சிதர்கள் வசம் ஒப்படைப்பது சரியல்ல. காசி விஸ்வநாதர் கோயிலை தனி சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதுபோல் தனி சட்டம் இயற்றி நடராஜர் கோயிலை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். கோயிலில் வெளிப்பிரகாரத்தில் நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சிலை இருந்ததாக கோபாலகிருஷ்ண பாரதி தனது வரலாற்றில் எழுதியுள்ளார். எனவே கோயில் தெற்குகோபுர வாயில் அருகே நந்தனார் சிலையை அமைக்க வேண்டும். கோயில் கும்பாபிஷேக குறித்த வரவு, செலவு, பண வசூல்களை கவனிக்க அரசு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.
கோடைக்காலம் தொடங்கி விட்டதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள ஆறு மற்றும் பாசன வடிகால் வாய்க்கால்களை தூர் வார வேண்டும். ஏற்கனவே வீராணம்ஏரி தூர்வாருவதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் தொடங்கப்படவில்லை.சிதம்பரம் நகரில் புதிய பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி 8 ஆண்டுகளாக சாலைகள் போடவில்லை. தற்போது நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால், தமிழகஅரசு நகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள திட்ட மதிப்பீடுபடி ரூ.4 கோடியே 60 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கற்பனைச்செல்வம், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.