நெல்லையில் 6,367 டன் நெல் கொள்முதல்: மண்டல மேலாளர்
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் பிசான பருவத்தில் 35 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் பிசான பருவத்தில் 35 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 6,367 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மண்டல மேலாளர் ஜான்மேத்யூ திங்கள்கிழமை தெரிவித்தார்.
வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட 161.5 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததால் நிகழ் பிசான பருவத்தில் தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல், வாழை, பயறு வகைகள் உள்ளிட்ட விளைப் பொருட்கள் 1.25 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
68,640 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டது. அம்பை 16, ஆடுதுறை 45 போன்ற குறுகிய கால நெற்பயிரும், கர்நாடகா பொன்னி போன்ற கூடுதல் கால நெற்பயிரும் சாகுபடி செய்யப்பட்டது. அதிகளவில் விவசாயிகள் அம்பை 16, ஆடுதுறை 45 நெல் ரகங்கள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தென்காசி, கடையநல்லூர், கீழப்புலியூர், ஆழ்வார்குறிச்சி, கடையம், கீழஆம்பூர், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
இம்மாவட்டத்தில் 60 சதவீதம் நெல் அறுவடை முடிந்துள்ளது. ஹெக்டேருக்கு 6,000 முதல் 9,000 கிலோ வரை நெல் மகசூல் கிடைத்து வருவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
35 மையங்கள்: நிகழ் பருவத்தில் வழக்கத்தை விட இம்மாவட்டத்தில் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 35 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நெல்கொள்முதல் குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஜான்மேத்யூ திங்கள்கிழமை கூறியதாவது: நிகழ் பிசானப் பருவத்தில் நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று திருநெல்வேலி மாவட்டத்தில் 35 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. மூன்றடைப்பு, கங்கைகொண்டானில் மேலும் 2 கொள்முதல் நிலையங்கள் திறக்கவும் ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் 35 கொள்முதல் நிலையங்கள் மூலம் மார்ச் 7 ஆம் தேதி 6,367 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,000 டன் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது. அந்தந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.