களக்காடு அருகே உப்பாற்றில் பாய்ந்த கல்லூரி பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் மாணவர்கள்
களக்காடு அருகே உப்பாற்றில் சனிக்கிழமை கல்லூரிப் பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் அதிர்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
களக்காடு அருகே உப்பாற்றில் சனிக்கிழமை கல்லூரிப் பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் அதிர்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
களக்காட்டில் இருந்து மேலத்திடியூருக்கு தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டது. பேருந்தில் சுமார் 20 மாணவ, மாணவியர் பயணித்தனர்.
பேருந்து களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலையில் கேசவநேரி உப்பாற்றின் குறுக்கேயுள்ள பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே களக்காடு நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக பேருந்தை நிறுத்த முயற்சிக்கும் போது, திடீரென பேருந்து அருகேயுள்ள உப்பாற்றுக்குள் பாய்ந்தது.
இதையடுத்து, பேருந்தில் பயணித்த மாணவர்கள் கூச்சலிட்டனர். பேருந்தின் ஓட்டுனர் சாமர்த்தியமாக ஆற்றுக்குள் பேருந்தை நிலைநிறுத்தியதால் மாணவர்கள் ஆற்றுக்குள் குதித்து உயிர்தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
குறுகலான பாலம்
விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையானது. மிகவும் குறுகலான இந்த பாலம் வளைவு பகுதியில் அமைந்துள்ளதால் எதிர் எதிரே வாகனங்கள் சென்று வர இயலாது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. பலமுறை இந்த பாலத்தில் வாகனங்கள் மோதி பாலத்தின் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
நான்குனேரி நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலத்தை விசாலமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை விசாலமாக கட்ட நடவடிக்கை எடுப்பதால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.