முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்ட பணிகளின் செயல்பாடுகள்  உலக வங்கி குழுவினர் ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உலக வங்கி குழுவினர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்து, சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

Updated On : 7 அக்டோபர், 2015 at 7:25 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:24 PM

விருதுநகர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உலக வங்கி குழுவினர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்து, சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

இம்மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டை, நரிக்குடி, வத்திராயிருப்பு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 2012 முதல் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கிராமங்களில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுவத்துவதற்கு அவ்வப்போது உலக வங்கி குழுவினர் ஆலோசனை வழங்குவர்.

அதேபோல், இத்திட்ட செயல்பாடுகளை கிராமங்களில் ஆய்வு செய்வதற்காக உலக வங்கியின் ஆலோசகர் வரலட்சுமி, புதுவாழ்வு திட்ட இயக்குநர் அலுவலகத்திலிருந்து மாநில வல்லுநர் பெஞ்சமின் விக்டர் ஆகியோர் வந்தனர். இவர்கள் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள படந்தால் கிராமத்தில் வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்சங்கம் மூலம் உடனடி உதவிகள் கிடைக்கச் செய்ய  வேண்டும், இச்சங்கம் தொடர்ந்து செயல்படுவதற்கு தேவையான நிதி தேவையையும், வாழ்வாதாரத்திற்கான தொழில்களையும் பெருக்கிக் கொள்ளும் வகையில் தொலைநோக்குத் திட்டத்தை தயாரித்து கடைபிடிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் தீ மற்றும் பாதுகாப்பு பயிற்சி, டீசல் இயந்திர பழுதுநீக்கம் பயிற்சி, டீசல் மரைன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பயிற்சி பெறுகிறவர்களை சந்தித்து, வேலைவாய்ப்புக்கான பயிற்சியை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், ஏற்கனவே பிரசித்தி பெற்ற செல்லிடபேசி தனியார் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்கள்.

இந்த ஆய்வின் போது விருதுநகர் மாவட்ட புதுவாழ்வு திட்ட மேலாளர் சண்முகராஜ் மற்றும் அனைத்து உதவி திட்ட மேலாளர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி புதுவாழ்வு திட்ட களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.