விருதுநகர் அருகே நிலத்தகராறில் 2 பேர் வெட்டிக் கொலை
விருதுநகர் அருகே நிலத்தகராறில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேரை மர்ம நபர்கள் வழிமறித்து வெள்ளிக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்தனர்.
விருதுநகர் அருகே நிலத்தகராறில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேரை மர்ம நபர்கள் வழிமறித்து வெள்ளிக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்தனர்.
மதுரை பழங்காடியைச் சேர்ந்த முனியசாமி(45), அவரது உறவினரான ஜெயபால்(40). இவர்கள் இருவரும் நிலத்தரகர்களாக தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்த கண்ணன், வரதராஜன் என்பவர்களுக்கு சொந்தமான, விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள 35 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்குகின்றனர். அதை வீட்டு மனைகளாக பிரித்து விற்பதற்கு பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கணேசன்(50) என்பவர் உதவி செய்கிறார்.
இந்நிலையில், வரதராஜன் உறவினரான வேலுச்சாமி இச்சொத்தில் பங்குள்ளதாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். இந்த வழக்கு தொடர்பாக ஜெயபால், முனியசாமி மற்றும் கணேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
அப்போது, ஜெயபால் நேராக மதுரைக்கு சென்று விடுகிறார். இதில், முனியசாமியும், கணேசனும் இருசக்கர வாகனத்தில் விருதுநகர் வழியாக அருப்புக்கோட்டைக்கு வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார்களாம். அப்போது, பெரியவள்ளிக்குளம் தனியார் பள்ளிக்கும்-பாலவநத்தத்திற்கும் இடையே செல்லும் போது மர்ம நபர்கள் வழிமறித்து கணேசனை வெட்டியும், அதைத் தொடர்ந்து தப்பியோடிய முனியசாமியை பாலவநத்தம் கிராம நுழைவு பகுதியிலும் வெட்டியும் படுகொலை செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி மகேஸ்வரன் உள்ளிட்ட போலீஸார் விரைந்து சென்று படுகொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.