விருதுநகர் அருகே இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்கு
விருதுநகர் அருகே நிலத்தகராறில் கூலிப்படையை ஏவி 2 பேர் வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவினர்கள்
விருதுநகர் அருகே நிலத்தகராறில் கூலிப்படையை ஏவி 2 பேர் வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவினர்கள் 7 பேர் மீது சனிக்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசனின் வளர்ப்பு மகன் கணேசன்(44). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அருப்புக்கோட்டை சாலையில் உள்ள சீனிவாசனுக்கு சொந்தமான 23 ஏக்கர் நிலத்தை தனது வளர்ப்பு மகனுக்கு எழுதி வைத்துவிட்டு உயிரிழந்தாராம்.
இதற்கு அப்போதே சீனிவாசனின் சகோதரரி மகன்களான வரதராஜன், வேலுச்சாமி, கண்ணன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே கணேசன், இந்நிலத்தை மதுரை கீழபனங்காடியைச் சேர்ந்த ஜெயபால், முனியசாமி ஆகியோருக்கு விற்பனை செய்தாராம். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.
Advertisement
தற்போது, நிலத்தை மனைகளாக்கி விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்நிலையில் பிரச்னை தொடர்பாக ஜெயபால், முனியசாமி, கணேசன் ஆகியோர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, ஜெயபால் மட்டும் மதுரைக்கு சென்றாராம். இதில், கணேசனும், முனியசாமியும் நிலப்பகுதி வரையில் சென்று தாமதமாக பாலவநத்தம் சென்றனர். அங்குள்ள கடையில் நின்ற போது, ஏற்கனவே நின்றிருந்த கண்ணன் தகராறு செய்தாராம். பக்கத்தில் இருந்தவர்கள் சமரசம் செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் வாகனத்தில் வீடுகளுக்கு சென்ற போது மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வழிமறித்து கணேசனை பாலவநத்தம் நுழைவு பகுதியில் வெட்டினார்கள். தப்பித்து ஓட முயற்சித்த மதுரை முனியசாமியை சிறிது தூரத்தில் தனியார் பள்ளி அருகே வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து கணேசன் மனைவி அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். முனியசாமி உயிரிழந்தது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாரதி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து கண்ணனின் உறவினர்களான சௌந்தரவள்ளி, சீதாலட்சுமி, வரதராஜன், வேலுச்சாமி, கண்ணன், விக்னேஷ், ஜெயராமன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.