கீழணை மற்றும் வீராணம்ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு: மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு
தமிழக முதல்வர் அறிவிப்பின்படி தஞ்சை மாவட்டம் கீழணையிலிருந்தும் மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்தும் பாசனத்திற்கு இன்று முதல் நீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 1,31,903 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
தமிழக முதல்வர் அறிவிப்பின்படி தஞ்சை மாவட்டம் கீழணையிலிருந்தும் மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்தும் பாசனத்திற்கு இன்று முதல் நீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 1,31,903 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள அணைக்கரையில் உள்ள கீழணையிலிருந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், நாகை மாவட்ட ஆட்தியர் எஸ்.பழனிசாமி ஆகியோர் பங்கேற்று பாசனத்திற்கு நீரை திறந்துவிட்டனர். வடவாறு வாய்க்காலில் விநாடிக்கு 1100 கனஅடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 300 கனஅடியும், தெற்குராஜன் வாய்க்காலில் 400 கனஅடியும் நீர் திறந்துவிடப்பட்டது. கீழணையின் மொத்தக் கொள்ளளவு 9 அடியாகும், ஆனால் அணையில் 7 அடிதான் நீர் உள்ளது. கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதேபோன்று கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியிலிருந்து பாசனத்திற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் நீரை திறந்துவிட்டார். ராதா வாய்க்கால் மதகில் 10 கனஅடியும், வீராணம் புதிய மதகில் 75 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏரியில் உள்ள 34 மதகுகளிலும் நீர் திறக்கப்பட்டு, அனைத்து மதகுகளிலும் விநாடிக்கு 400 கனஅடிநீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வீராணம்ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும், ஏரியில் வியாழக்கிழமை நிலவரப்படி 45.50 அடி நீர் உள்ளது.
கீழணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் நேரடி பாசனம் பெறும் 47,997 ஏக்கர் நிலங்களும், வடவாறு வாய்க்கால் மூலமாக வீராணம் ஏரியில் நிரப்பி அதன் மூலம் 44,586 ஏக்கர் பாசன நிலங்களும் மற்றும் தஞ்சாவூர், நாகை மாவட்டங்களுக்கு நேரடி பாசனம் மூலமாக 39,059 ஏக்கர் நிலங்களும், ஆக மொத்தம் 1,31,903 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், சிதம்பரம் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் கே.ஏ.பாண்டியன் (குமராட்சி), கே.மணிகண்டன் (காட்டுமன்னார்கோயில்), கடலூர் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.செல்வராஜ், கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, விருத்தாசலம் செயற்பொறியாளர் பெரியசாமி, உதவி செயற்பொறியாளர் ஐய்யம்பெருமாள், கண்ணன், மக்கள்-தொடர்பு அலுவலர் லிங்கம், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன், கே.வி.இளங்கீரன், விஜயகுமார், ரங்கநாயகி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.