புதுவையில் திரைப்பட நகரம் தொடங்க திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை
புதுச்சேரியில் விரைவில் திரைப்பட நகரம் துவங்க வேண்டும் என அரசை திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரியில் விரைவில் திரைப்பட நகரம் துவங்க வேண்டும் என அரசை திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுக்குழுக் கூட்டம் நீடராஜப்பர் வீதியில் உள்ள செகா ஆர்ட் கேலரியில் புதன்கிழமை இரவு நடந்தது. சம்மேளன தலைவர் சேவியர் தலைமை தாங்கினார். செயலாளர் ஜாக்கோ முன்னிலை வகித்தார்.
பிப்டிக் சேர்மன் இரா. சிவா, எம்.எல்.ஏ., சங்கத்தின் கவுரவத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு, சிறப்புரை ஆற்றினார். பின்னர் சங்கத்தின் ஆலோசகராக கலைமாமணி எம்.எஸ். ராஜாவும், செய்தி தொடர்பாளராக தேசிய விருதாளர் ஆதவனும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மும்பையில் உள்ள அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாமன்றத்துடன் இச்சங்கத்தை இணைப்பது, புதுச்சேரியில் திரைப்பட நகரம் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை வலியுறுத்துவது, சங்க உறுப்பினர்களுக்கு அரசு சார்ந்த நலத்திட்டங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் முரளி, முத்து, கலைமணி, சேகர், சாய்பாபு, நந்தகோபால், துரை, சத்தீஷ், சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.