அண்ணாமலைப் பல்கலை துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாததால், வியாழக்கிழமை சுமார் 30-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியை சமாளிக்க பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் துறையில் பணியாற்றி வந்த 369 உதவிப் பேராசிரியர்களை, தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு பொதுவிதி எண்: 11-ன் கீழ் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழகஅரசு கல்லூரி கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்தார். அதன் பேரில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 369 உதவிப் பேராசிரியர்களுக்கு கடந்த பிப்.1-ம் தேதி பணிமாற்றம் குறித்த பணி ஆணை வழங்கி பணியிலிருந்து உடனடியாக விடுவித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 366 பேர் பணியில் சேர்ந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பணிமாற்றம் செய்யப்பட்ட மேற்கண்ட 366 உதவிப் பேராசிரியர்களுக்கும் கடந்த பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பணிநிரவலில் சென்ற பேராசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், சி.எஸ்., இ.எல். ஆர்.ஹெச் உள்ளிட்ட விடுப்புகளை எடுப்பதற்கு ஏதுவாக அந்தந்த கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஎஸ் கணக்கை தகுந்த வழிமுறையில் உடனடியாக தொடங்கிட வேண்டும் என வலியுறுத்தி பணிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் வியாழக்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்து முறையிட்டனர். பின்னர் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து துணைவேந்தர் செ.மணியன், பதிவாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் மேற்கண்ட உதவிப் பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கல்லூரி கல்வி இயக்குநரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். விரைவில் ஊதியம் வழங்கபடாவிடில் பணிமாறுதல் செய்யப்பட்ட 369 உதவிப் பேராசிரியர்களுக்கு விடுப்பு எடுத்து வந்து பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.