நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க பாமக முடிவு
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என புதுவை மாநில பாமக முடிவு செய்துள்ளது.
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என புதுவை மாநில பாமக முடிவு செய்துள்ளது.
நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாமக மாநில செயலாளர் ஜெ.கோபி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த 28-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை முதலியார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில செயலாளர் கோபி(எ)கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆலோசகர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பாமக பொதுச்செயலாளரும் புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான வடிவேல்ராவணன், முன்னாள் எம்.பி. தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
துணைச் செயலாளர்கள் வடிவேல், ஞானசேகரன், பாண்டியராஜன், மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் குமார், சரவணன், வேணுகோபால் உள்பட மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் அதிகார பலத்தால் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது. மேலும் காங்கிரஸ், அதிமுக கட்சிகளின் பணபலம் ஜனநாயகத்தையே தோல்வியுறச் செய்யும். எனவே நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.