முகப்பு
தற்போதைய செய்திகள்

புதிய வெற்றிகளை வழங்கும் ஆண்டாக மலரட்டும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து

புதிய வெற்றிகளை வழங்கும் ஆண்டாக இந்த தமிழ்ப் புத்தாண்டு மலரட்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:17 PM
பகிர்:

புதிய வெற்றிகளை வழங்கும் ஆண்டாக இந்த தமிழ்ப் புத்தாண்டு மலரட்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச்செய்தி:-

பலஆண்டுகளாக தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்த நிலையில், அந்த மரபினை மாற்றி, தமிழ்ப் புத்தாண்டை வேறு ஒரு தினத்துக்கு மாற்றிய செயல் திருத்தப்பட்டது.

நமது முன்னோர் வகுத்த வழிமுறையின்படியும், தமிழ் மக்களின் விருப்பப்படியும் சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் முறையை நிலைநாட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற ஒரு முதன்மை மாநிலமாக உருவாக்குவதே தனது கனவு என்று ஜெயலலிதா தெரிவித்தார். அவரது கனவை நனவாக்கிட அனைவரும் ஒற்றுமையுடன் அயராது உழைத்து, அவர் வகுத்துத் தந்த வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து தமிழகத்தைக் கொண்டு செல்ல இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.

இந்த தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் தம் வாழ்வில் புதிய வளர்ச்சியையும், புதிய மலர்ச்சியையும் புதிய வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →