தென்னிந்திய அறிவியல் கண்காட்சி: புதுவையில் 5-ம் தேதி தொடக்கம்
புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம், பெங்களுரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும்
புதுச்சேரி
புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம், பெங்களுரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி புதுச்சேரி செல்லப்பெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது.
இக்கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைக்கிறார். முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்குகிறார். கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், பேரவை துணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து, தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, கல்வித்துறை செயலர் அருண் தேசாய், பெங்களுரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியக இயக்குனர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் படைப்புகள் "நாட்டின் முன்னேற்றத்திற்கு அறிவியல் நுட்பம் மற்றும் கணிதம்" என்ற கருப்பொருளை முதன்மையாக கொண்டு உடல்நலம், தொழில், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு, அன்றாட வாழ்வில் கணிதத்தீர்வு போன்ற துணை கருப்பொருளில் இடம் பெறுகின்றன.
250 அறிவியல் படைப்புகள்
ஒவ்வாரு மாநிலத்தில் இருந்தும், மாணவர்கள் குழுக்களாக தயார் செய்த 15 படைப்புகளும், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் 20 தனிப்படைப்புகளும், ஆசிரியர்களின் 15 படைப்புகளும் என்ற அடிப்படையில் 5 மாநிலங்களிலிருந்து மொத்தம் 250 அறிவியல் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம் பெற உள்ளன.
மேலும், புதுச்சேரி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிடுவதற்கு வசதியாக கீழ்க்கண்ட அட்டவணைப்படி கால ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 5-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை புதுச்சேரி கொம்யூன், அன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை அரியாங்குப்பம் கொம்யூன், 6ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உழவர்கரை கொம்யூன், அன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மண்ணாடிப்பட்டு கொம்யூன், 7ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வில்லியனூர் கொம்யூன், அன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நெட்டப்பாக்கம் கொம்யூன், 8ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் மற்றும் அருகாமையில் உள்ள மாநிலங்கள், அன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பாகூர் கொம்யூன் என நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களை சேர்ந்த பங்கேற்பாளர்கள் புதுச்சேரி சுற்றுலா தலங்களை பார்வையிடவும் கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.