மணப்பாறை அருகே ஜனவரி 29-ம் தேதி ஜல்லிக்கட்டு அதிகாரிகள் ஆய்வு, ஆலோசனை
திருச்சி: மணப்பாறை அருகேயுள்ள கருங்குளத்தில் ஜனவரி 29-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி: மணப்பாறை அருகேயுள்ள கருங்குளத்தில் ஜனவரி 29-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளத்தில் ஆண்டு தோறும் ஜனவரியில் அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். உச்சநீதிமன்ற தடையை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
இதற்கிடையே ஜல்லிக்கட்டு தடையை அகற்றக்கோரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு மீதான அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
இதனை தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி ஒன்றியம் கருங்குளத்தில் ஜனவரி 29-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு அது தொடர்பான அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் கருங்குளத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (நிலம்) ரமேஷ் தலைமையில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ராஜராஜன், வட்டாட்சியர் ராஜேந்திரன், மணப்பாறை காவல் துணைகண்காணிப்பாளர் வனிதா, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, கால் நடைத்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து வாடிவாசல், காளைகள் நிறுத்துமிடம், மருத்துவ முகாம்கள் அமைக்குமிடம், ஜல்லிக்கட்டு நடக்கும் உள்ளிட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆய்வறிக்கை அனுப்பிய பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கருங்குளத்தில் ஜன. 29-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.