புதுவை பல்கலையில் யுஜிசி சிறப்பு குழு தணிக்கை தொடங்கியது
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் யுஜிசி சிறப்புக் குழுவின் முழுமையான தணிக்கை திங்கள்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் யுஜிசி சிறப்புக் குழுவின் முழுமையான தணிக்கை திங்கள்கிழமை தொடங்கியது.
நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கிய புதுவை பல்கலைக்கழகம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் தரவரிசைப்பட்டியலில் 10-ம் தேதி இடத்தைப் பெற்றிருந்தது. இந்நிலையில் பல்வேறு பிரச்னைகள், நிர்வாக கோளாறுகள் காரணமாக 37-வது இடத்துக்கு சென்று விட்டது.
இதனால் மிகவும் மோசமான நிலையில் உள்ள பல்கலைக்கழகங்களில் முழு தணிக்கை செய்து மேம்படுத்த யுஜிசி சிறப்புக் குழுக்களை ஏற்படுத்தி உள்ளது.
இதன்படி புதுவைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டு தொடங்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய நிதி ஆதாரங்களை உருவாக்குவதல், புதியப் படிப்புகளை அறிமுகம் செய்தல், மத்திய அரசின் நிதி ஆதாரத்தோடு நடைபெற்று வரும் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை உருவாக்கியுள்ளது.
இக்குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஸ்ரீபாத்கர்மால்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி பல்கலை துணைவேந்தர் கைலாஷ்சோடானி, கௌஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியர் மஷார் அசிப், பெங்களூரு ஐஐஎம் பேராசிரியர் சங்கரன் பாசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு வரும் 17 ஆம் தேதி வரை புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், துணைவேந்தர் என பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்தறிகின்றனர்.
மேலும் பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தேவையானவை, கல்வித் தரம் உயர்வு, ஆராய்ச்சி பிரிவுகளின் நிலை தொடர்பாக துறைவாரியாகச் சென்று முழு தணிக்கை மேற்கொள்கின்றனர்.
புதுவையில் மட்டுமல்லாமல் காரைக்காலில் இயங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தின் துறைகளுக்கும் சென்று மாணவர்களைச் சந்தித்திப் பேசவுள்ளனர் . பின்னர் தங்கள் அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் அளிக்க உள்ளனர்.