உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாரிக்கர், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த சில தினங்களாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மும்பை வந்த பிரதமர் மோடி, லீலாவதி மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சைப் பெற்று வரும் மனோகர் பாரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கோவா மாநில பாஜக செய்தி தொடர்பாளர் சந்தேஷ் சதாலே ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவா பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று திங்கள்கிழமை (பிப்.19) தொடங்குகிறது. முதள் நாளன்று ஆளுநர் உரையாற்றவுள்ளார். முதல்வர் மனோகர் பாரிக்கர், மும்பையில் சிகிக்சை பெற்று வருவதால், அவரால் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாது. எனவே, கூட்டத் தொடர் 3 நாள்களாகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது குறித்து ஆளுநர் மிருதுளா சின்ஹாவைச் சந்தித்து பேரவைத் தலைவர் பிரமோத் சாவத் மேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மனோகர் பாரிக்கரால், கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. எனவே, கூட்டத் தொடரை முடித்துக் கொள்வது குறித்து திங்கள்கிழமை முடிவு செய்ய இருக்கிறோம். நிதித் துறையையும் பாரிக்கர் கவனித்து வந்ததால், அவருக்குப் பதிலாக, மகாராஷ்டிர கோமந்தக் கட்சித் தலைவரும், அமைச்சருமான சுதீன் தவாலிகர் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார் என்றார் அவர்.