முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்களிடையே அதிருப்தி அதிகரித்தாலும் அடுத்த பிரதமர் யார்..? கருத்து கணிப்பு சொல்லுவது என்ன..?

மத்திய அரசு மீது நாட்டு மக்களுக்கு ஏமாற்றங்களும், அதிருப்தியும் அதிகரித்துள்ள நிலையிலும், இன்று மக்களவை தேர்தல் நடந்தாலும் மீண்டும்

Updated On : 26 ஜனவரி, 2018 at 1:01 PM
பகிர்:

மத்திய அரசு மீது நாட்டு மக்களுக்கு ஏமாற்றங்களும், அதிருப்தியும் அதிகரித்துள்ள நிலையிலும், இன்று மக்களவை தேர்தல் நடந்தாலும் மீண்டும் பிரதமர் பதவியைப் பிடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள நபராக பிரதமர் நரேந்திர மோடி தொடர்கிறார்.

இது தொடர்பாக ஏபிபி நியூஸ்-லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் ஆகியவை இணைந்து "நாட்டு மக்களின் இப்போதைய மனநிலை' என்ற ஆய்வு நடத்தினர். அதில், வேலையின்மை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது குறித்து மக்களிடையே மோடி அரசு மீது அதிருப்தி அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. எனினும் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் நரேந்திர மோடிதான் என்று அதிக அளவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமராக நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் கறுப்புபணத்தை ஒழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஒரு தேசம் ஒரே வரிவிதிப்பு திட்டமான ஜிஎஸ்டி வரி விதிப்பு, மேக் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா போன்ற பல்வேறு திட்டங்கள், வெளிநாடுகளுடனான நட்புறவு போன்ற மோடி ஆட்சியின் செயல்பாடுகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன

Advertisement

இப்போது மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால் பாஜக கூட்டணி 40 சதவீத வாக்குகளுடன் 293 முதல் 309 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெற்றதைவிட சுமார் 30 இடங்கள் குறைவாகும். அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 122 முதல் 132 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு 59 இடங்கள் மட்டும் கிடைத்தன. இதில் காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

இப்போதைய நிலையில் பாஜகவுக்கு 34 சதவீத வாக்குகளும், காங்கிரஸூக்கு 25 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்ததைவிட இப்போது பிரதமர் நரேந்திர மோடி மீதான மக்களின் அபிமானம் 7 சதவீதம் குறைந்துவிட்டது. எனினும், அவரே பிரதமர் பதவிக்கான முதல் விருப்பமாகத் தொடர்கிறார். அதே நேரத்தில் மோடிக்கு சவால் விடும் அளவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகழ் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 8 மாதத்துக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் அடுத்த பிரதமராக ராகுல் வருவதற்கு 9 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இப்போது ராகுலுக்கான ஆதரவு 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் சிறந்த பிரதமர் மோடி என 28 சதவீதமும், முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்திக்கு 20 சதவீதம், வாஜ்பாய்க்கு 10 சதவீதம், நேருவுக்கு 8 சதவீதம் ஆதரவும் கிடைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.