முகப்பு
தற்போதைய செய்திகள்

நொய்டா கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தின் தொழில் நகரமான நொய்டா அருகில் உள்ள ஷா பெரி என்னும் கிராமத்தில் புதிதாக 6 மாடி கட்டிடம்

Updated On : 19 ஜூலை, 2018 at 10:08 AM
பகிர்:


நொய்டா கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின்வ் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தின் தொழில் நகரமான நொய்டா அருகில் உள்ள ஷா பெரி என்னும் கிராமத்தில் புதிதாக 6 மாடி கட்டிடம் ஒன்று கட்டும் பணி கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு இந்த கட்டிடம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து அருகில் இருந்த 4 மாடி கட்டிடத்தின் மீது விழுந்தது. இதனால் 4 மாடி கட்டிடமும் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.

6 மாடி கட்டிடம் கட்டும் பணியில் அதன் கீழ்த்தளத்தில் வேலை பார்த்து வந்த 12 தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதேபோல் 4 மாடி கட்டிடத்தில் வசித்த சில குடும்பத்தினரும் இடிபாடுகளில் சிக்கினர். இதனால் மொத்தம் எத்தனை பேர் கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கியுள்ளனர் என்ற விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. 

Advertisement

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று புதன்கிழமை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து 6 மாடி கட்டிடத்தின் நில உரிமையாளர் உள்பட இதுவரை 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"இங்கு அனைத்து கட்டுமான பணிகளும் சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து உள்ளூர் நிர்வாகத்தில் பல முறையிட்டோம், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர் தேஜ்பாலை சந்தித்து நடவடிக்கை எடுக்க கோரினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிஎஸ்பி மற்றும் எஸ்எஸ்பியையும் சந்தித்தும் முறையிட்டும் எந்த பலனும் இல்லை என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர். 

இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.