ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 500க்கும் மேற்பட்டோர் காயம்
ஈரானின் மேற்கு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில்
ஈரானின் மேற்கு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஈரான் எல்லையான குவாஷிர் ஷீரின் பகுதியை மையமாகக் கொண்டும், ஈராக் எல்லை நகரான கானாகினிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. பூமியில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இரவு 8 மணிக்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் கட்டடங்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் குலுங்கியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்தனர். இருந்தபோதிலும், இந்த நடுக்கத்தில் வீடுகள், கடைகள், மின்கம்பங்கள் இடிந்து விழுந்ததில், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரானின் சர்போல் இ ஜஹாப் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், நிலநடுக்கத்தால் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. உயிரிழப்பு, சேதங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர், போலீஸார், மீட்புப்படையினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் பூகம்பம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளிலும், தெருக்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு தலைநகர் பாக்தாத் வரையிலும், ஈராக்கின் பல மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.