அரசு எந்த நேரத்தில் தடுமாறினாலும் ஆக்கபூர்வமான அறிவுரைகளை ஆர்.எஸ்.எஸ். வழங்கும்: மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் எந்த அளவிற்கு நல்ல வேலைகள் செய்தாலும் சரி, மற்றவர்களுக்கு உதவியிருந்தாலும் சரி பெருமிதம் கொள்ளாமலும், ஆணவத்துக்கு இடம் கொடுக்காமல்
கான்பூர்: அரசு எந்த நேரத்தில் தடுமாறினாலும், அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆக்கபூர்வமான அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கும்’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் சங் பரிவார் அமைப்பின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசுகையில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மகத்தான அதிகாரத்தை பெற்றிருக்கின்றன. அதற்காக அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்று எச்சரித்தவர், அரசு எந்த நேரத்தில் தடுமாறினாலும், அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆக்கபூர்வமான அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கும் என்று தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மற்றொரு கூட்டத்தில் மோகன் பகவத் பேசுகையில், சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வருமாறும், கல்வியறிவின்மை, போதைப்பொருள் மற்றும் மது போதை பழக்கம் மற்றும் பிற சமூக தீமைகள் அனைத்தையும் அகற்றுமாறும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் எந்த அளவிற்கு நல்ல வேலைகள் செய்தாலும் சரி, மற்றவர்களுக்கு உதவியிருந்தாலும் சரி பெருமிதம் கொள்ளாமலும், ஆணவத்துக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
நடந்து முடிந்த 17-வது மக்களவைக்கான தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.